யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், நேற்றைய அகழ்வாய்வின் போது முக்கியமான புதிய சான்றுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாளான நேற்று, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டது. பின்னர் அந்தப் பொருள் மிகுந்த அவதானத்துடன் அகழ்ந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டதுடன், வழக்கின் 120ஆவது சான்றுப் பொருளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக குறித்த சான்றுப் பொருள் நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே அகழ்வுப் பணிகளின் போது புதைகுழி பகுதியில் இருந்து உடைந்த நிலையில் காணப்பட்ட வளையல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அது முழுமையாக வெளிக்கொணரப்படாத நிலையில் இருப்பதாகவும், அதனை நுணுக்கமான முறையில் சுத்திகரித்து சான்றுப் பொருளாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல மனித எலும்புக்கூடுகள் மற்றும் பல்வேறு சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் வழக்கின் விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரங்களாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக