இலங்கையின் கல்வித்துறையில் முக்கிய முன்னேற்றமாக, நாடு முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்படும் 126 பாடசாலை விடுதிக் கட்டிடங்களை நவீனமயப்படுத்துவதற்காக ரூ.1,008 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் கல்விச் சூழல், சுகாதாரம் மற்றும் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2026 முதல் 2028 வரையிலான காலப்பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட பாடசாலை விடுதிகளின் அத்தியாவசிய வசதிகள் முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக கிராமப்புற மற்றும் தூரப்பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் தரமான தங்குமிட வசதிகளை உறுதிப்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், விடுதி வசதிகளின் பற்றாக்குறையால் எதிர்நோக்கும் சவால்களுக்கும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசாங்கத்தின் கல்வி உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளில் இது முக்கிய முதலீடாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக