கொட்டக்கலை நகரில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மோதலை அமைதிப்படுத்துவதற்காக கடமையில் ஈடுபட்டிருந்த திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இரு தரப்பினராலும் தாக்கப்பட்டு காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான மேலதிக பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு விரைந்தது. எனினும், அங்கு சென்ற அதிகாரிகளும் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் ஆரம்ப கட்டத்தில் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் காரணமாக கொட்டக்கலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக