தெமட்டகொட பகுதியில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர்களான தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கதிர்காமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 3ஆம் திகதி பேலியகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் தெமட்டகொட பகுதியில் உள்ள வீட்டொன்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அந்த வீட்டில் இருந்து 19 உள்ளூர் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவை பாதாள உலகக் குழுக்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னதாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படும் இளம் தம்பதியினர் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கைது செய்யப்பட்ட தம்பதியினர் தெமட்டகொட பகுதியில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற தகவலும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக