நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 33 வயதுடைய பெண் ஒருவர் பின்னர் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க என்ற நபருடன் கடந்த 03ஆம் திகதி முதல் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகளில், குறித்த பெண் தங்கியிருந்த அறையிலிருந்து கடந்த 16ஆம் திகதி இரவு சுமார் 10.30 மணியளவில் வெளியே கொண்டு செல்லப்பட்டு காரொன்றில் ஏற்றப்பட்டதாகக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண்ணின் சடலம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணுக்கும் அவருடன் தங்கியிருந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆண் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நுவரெலியா பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு அதிகாரிகள் இணைந்து சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கமெரா காட்சிகள், விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக