தமிழ் சினிமாவில் 1990களில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாவா லட்சுமணன், தற்போது கடுமையான உடல்நல மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘மாயி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற பாவா லட்சுமணன், பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் அண்மைக்காலமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமா துறையில் அவரின் பங்களிப்பு அரிதாக காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வழங்கிய பேட்டியில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், ஆரம்பத்தில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய பின்னர் நடிகராக அறிமுகமானதாக கூறினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது காலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் தொற்று தீவிரமடைந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி காலில் இருந்த மூன்று விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தன்னால் நடக்க முடியாது என்ற தவறான தகவல் சினிமா வட்டாரங்களில் பரவியதால், திரைப்பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தாம் வசித்து வந்த வீட்டையும் காலி செய்யுமாறு கூறப்பட்டுள்ளதாகவும், தற்போது நண்பர்களின் உதவியுடன் தங்குமிட வசதி தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழ்நிலையில் சில கலைத்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் தமக்கு உதவி செய்ய வேண்டும் என உருக்கமான கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். அவரை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும் அது சாத்தியமாகவில்லை என்றும், வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தை அமைதியாக கழிப்பதற்காக குறைந்தபட்சம் ஒரு வீடு கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாவா லட்சுமணனின் இந்த உருக்கமான வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக