ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கி வரும் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆசிரியர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல பிரச்சினைகள் இதுவரை முழுமையாக தீர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, 2025 ஜூலை 1 ஆம் திகதி முதல் பதவி உயர்வு வழங்கும் முறைமையில் மாற்றம் செய்து பரீட்சை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது இதுவரை முறையாக அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்கள் கோரி வந்த சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள இரு பங்குகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, பல வலயங்களில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பாக அண்மையில் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தெளிவான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், சில பகுதிகளில் நடைமுறைக்கு முரணான ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெறுவதாகவும், அவை கல்விக் கொள்கைகளுக்கு அமைய வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் தலையீடுகள் இன்றி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உரிய சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் ஜனநாயக அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுடன், அவை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக