இலங்கையையே உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் வடக்கை மட்டுமல்லாது நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கம் குறித்த தீவிர விவாதங்களை உருவாக்கியிருந்தது.
வழக்கின் ஆரம்ப விசாரணையில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் நீதிமன்ற மேன்முறையீட்டில் இருவர் விடுவிக்கப்பட்டதுடன், ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் குற்றவாளிகளில் இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிருடன் உள்ள மூவருக்கு எதிரான மரண தண்டனை மீண்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் ஒன்றாக கருதப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற சமூகக் கோரிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இரு நபர்களும் உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக