யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தங்களது முதல் நேரடித் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன. இதன் எதிரொலியாக, திங்களன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 116.51 டொலராக உயர்ந்துள்ளது. இது இந்த மாதத்தில் மட்டும் 59% வளர்ச்சியாகும், இது 1990 வளைகுடாப் போரின் போது ஏற்பட்ட உயர்வைக் காட்டிலும் அதிகமாகும். ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக அறிவித்துள்ள நிலையில், உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது செயலிழந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறினாலும், தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போரானது தற்போது பாரசீக வளைகுடாவையும் தாண்டி செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) வரையிலும் பரவியுள்ளதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை யான்பு (Yanbu) துறைமுகத்திற்குத் திருப்பிவிட்டுள்ள போதிலும், அங்கிருந்து ஏற்றுமதி தடைபட்டால் எகிப்தின் சுயஸ் கால்வாய் குழாய் வழிகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என ஜேபி மோர்கன் (JPMorgan) ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். OECD அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தை அதன் வளர்ச்சிப் பாதையிலிருந்து முற்றிலுமாகத் தள்ளிவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக