சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு பிரதானி பீற்றர் ப்ரூயர் தலைமையிலான குழுவினர் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த தகவலை பீற்றர் ப்ரூயர் தனது உத்தியோகபூர்வ லிங்க்ட்இன் சமூக வலைத்தளப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அறிவிப்பின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஜூன் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால பொருளாதார சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம், அதன் செயற்பாடுகள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள இலக்குகள் தொடர்பாகவும் குழுவினர் மறுஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகளின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக