மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்டர் தளம் (Helipad) இன்று சனிக்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஈராக் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பலத்த பாதுகாப்புமிக்க 'கிரீன் சோன்' (Green Zone) பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்திற்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் காட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களான 'கதாயிப் ஹிஸ்புல்லா' (Kataeb Hezbollah) அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்கத் தூதரகம் ஏற்கனவே தனது பாதுகாப்பு எச்சரிக்கையை 'நிலை 4' (Level 4) ஆக உயர்த்தியுள்ளதுடன், ஈரானிய ஆதரவு குழுக்களால் தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாகத் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாக்தாத் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக