இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) இல் இருந்த 84 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை ஆய்வில் பங்கேற்றுவிட்டு 180 பணியாளர்களுடன் ஈரான் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரி நாட்டின் போர்க்கப்பல் ஒன்று டார்பிடோ உதவியுடன் கடலில் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை என அமெரிக்கா தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான தாக்குதல் காணொளியையும் வெளியிட்டுள்ளது. தற்போது எஞ்சியிருக்கும் சுமார் 96 பேரைத் தேடும் பணிகளில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், "எதிரிகளின் தீமையைத் தடுக்கும் வரை ஓயமாட்டோம்" என ஈரான் இதற்குப் பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக