இலங்கையின் கல்வித்துறையில் அரிய சாதனையாக, வெறும் 14 வயதிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E O/L) பரீட்சையில் தோன்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
காலி மாவட்டத்தின் லபுதுவ சிறிதம்ம வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் அய்யாஷ் அஹமட் என்ற மாணவரே இந்த அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார். இம்முறை நடைபெற்ற O/L பரீட்சையில் தனிப்பட்ட விண்ணப்பதாரராக தோற்றிய அவர், 8 “A” சித்திகளையும் ஒரு “B” சித்தியையும் பெற்று கல்வித்துறையில் புதிய மைல்கல்லை பதித்துள்ளார்.
பொதுவாக இலங்கையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சுமார் 16 வயதுடைய மாணவர்களே O/L பரீட்சைக்கு தோற்றுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அய்யாஷ் அஹமட் தனது தனிப்பட்ட முயற்சி, கடின உழைப்பு மற்றும் உறுதியின் மூலம் 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பாடத்திட்டங்களை ஒரே வருடத்தில் சுயமாக கற்று இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கியுள்ள அவர், நாட்டின் திறமையான மாணவர்களில் ஒருவராக பாராட்டப்படுகிறார். இந்த சாதனை பல மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், வயது என்பது வெற்றிக்கான தடையல்ல என்பதையும் நிரூபித்துள்ளது.
எதிர்காலத்தில் விமானப் பொறியியலாளராக (Aircraft Engineer) உருவாகி நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதே தனது இலட்சியம் என அய்யாஷ் அஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த இளம் மாணவனின் கல்விச் சாதனை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வி வட்டாரங்களின் பாராட்டுக்களை பெற்று வருவதுடன், இலங்கையின் கல்வித்துறையில் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக