நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின் படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மற்றும் பயணிகள் தொடர்ந்தும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக