அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தனது சமூக ஊடகப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய வரி காரணமாக தேங்காய் இறக்குமதிச் செலவு ஒரு கிலோ கிராமுக்கு 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால், மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உள்ளூர் தேங்காய்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்குத் திருப்பப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, பண்ணை மட்டத்திலான தேங்காய் விலைகள் குறையக்கூடும் என்பதுடன், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் அபாயமும் உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேங்காய் இறக்குமதி முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது தடைப்பட்டாலோ, அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருவாயும் கிடைக்காமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரிக் கொள்கையின் தாக்கம் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் ஏற்றுமதி வருவாய் மற்றும் அரசாங்க வருவாயில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதேவேளை தொழில்துறையையும் கடுமையான பொருளாதார அழுத்தத்திற்குள் தள்ளக்கூடும் என்றும் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
எனவே, இந்த வரி தொடர்பான கொள்கையின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் கவனமாக மதிப்பீடு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக