எரிபொருள் விலைகளின் மாதாந்திர திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படக்கூடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டதுடன், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக ஏனைய பேருந்து சங்கங்களுடனும் கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்கால எரிபொருள் விலை திருத்தங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு பேருந்து கட்டணங்களை குறைக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வின் தாக்கத்தால் தனியார் பேருந்து துறை கடுமையான நிதிச் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஜூன் மாத தொடக்கம் முதல் இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் அளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடனும் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக