பிரான்ஸ் எல்லைப் பகுதியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி பின்னர் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20,000 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, டெஸ்லா வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய அமைப்பொன்றின் கட்டிட ஜன்னல்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜெனீவா காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். நகரின் மையப்பகுதியில் கண்ணீர்ப்புகை பரவிய நிலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் காவல்துறையினரை நோக்கி பொருட்களை எறிந்ததுடன், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கியொன்றின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டதுடன் அதன் கண்ணாடி ஜன்னல்களும் உடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் பங்கேற்ற சில குழுக்கள் உலகமயமாக்கல், முதலாளித்துவம், சமூக சமத்துவமின்மை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் மற்றும் சமூக கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளும் ஏந்தப்பட்டிருந்தன.
ஜூன் 15 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துகொள்ள உள்ளனர். மத்திய கிழக்கு நிலைமை, உக்ரைன் போர் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சிமாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுவிஸ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் இணைந்து ஆயிரக்கணக்கான காவல்துறையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக