மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ள வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஓட்டமாவடி தபாலக வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கெமராக்களில் தெளிவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் அதே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளுடன் அதன் ஆவணங்கள் மற்றும் தலைக்கவசமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் வெளியே வந்த வீட்டு உரிமையாளர், சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடிச் சென்றவர்கள் ஏன் மீண்டும் வந்து வாகனத்தை ஒப்படைத்தனர் என்பது இதுவரை தெரியவராத மர்மமாக உள்ளது. பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சி.சி.ரி.வி. காட்சிகள் காரணமாக அச்சமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிவதற்காகவும், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக