நெடுந்தீவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான கடல் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கலுக்கு முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக திருத்தப் பணிகளுக்காக சேவையில் இருந்து விலக்கப்பட்டிருந்த வடதாரகை படகு, அனைத்து பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் - நெடுந்தீவு இடையேயான போக்குவரத்து சேவையில் வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் முக்கிய பங்காற்றி வந்தன. எனினும், மூன்று படகுகளும் ஒரே காலகட்டத்தில் பழுதடைந்ததால், தீவுப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் மாணவர்களும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, படகுகளை விரைவாக திருத்தும் பணிகளை முன்னெடுத்தனர். அதன் பலனாக முதற்கட்டமாக வடதாரகை படகு மீண்டும் சேவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெடுந்தாரகை படகு காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் விரிவான திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பணிகள் நிறைவடைந்தவுடன் அது மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்த குமுதினி படகின் இயந்திரப் பராமரிப்பு பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடதாரகை படகின் மீள்சேவை, நெடுந்தீவு மக்களின் பயண சிரமங்களை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மீதமுள்ள இரு படகுகளும் சேவைக்கு திரும்பிய பின்னர் கடல் போக்குவரத்து சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என நம்பப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக