பல்லவன் ஹோட்டல் விவகாரத்தால் ஏற்பட்ட விரிசல் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை. கடந்த எபிசோடில் பாண்டி மற்றும் பல்லவன் சமாதானமான நிலையில், சோழனும் சேரனும் இன்னும் பல்லவன் மீது கடும் கோபத்திலேயே உள்ளனர். இன்றைய எபிசோடில், பல்லவன் நேரில் வந்து மன்னிப்பு கேட்டும், சோழன் அதைப் பொருட்படுத்தாமல் அவரை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார். பல்லவனின் இந்த நிலையைப் பார்த்து பாண்டி பரிதாபப்பட்டாலும், "அவர் செய்த தவறுக்கு இதுவே சரியான தண்டனை" எனச் சோழன் உறுதியாகக் கூறிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து, நிலா பாண்டியிடம் பேசி, வானதியுடன் நேரத்தைச் செலவிடுமாறும், இருவருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வெளியே அழைத்துச் செல்லுமாறும் அறிவுரை வழங்குகிறார்.
மறுபுறம், நிலாவின் தோழி திவ்யா வீட்டிற்கு வந்து நிலாவின் தொழில் ஆர்வம் குறித்துப் பேசுகிறார். முதலீடு செய்யப் பணம் இல்லாததால் நிலா பின்வாங்கிய நிலையில், திவ்யா ஒரு அதிரடிச் சலுகையை முன்வைக்கிறார். இப்போதைக்கு முதலீடு தேவையில்லை என்றும், கம்பெனியில் பார்ட்னராக இருந்துவிட்டுப் பணம் கிடைக்கும்போது திருப்பித் தரலாம் என்றும் அவர் கூறுகிறார். முதலில் தயங்கிய நிலா, தனது சகோதரர்களான சோழன் மற்றும் சேரனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பார்ட்னராகச் சேரச் சம்மதிக்கிறார். இதனால் நிலாவின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும், பல்லவனுடனான பகை இன்னும் நீடிப்பது கதையில் பரபரப்பைத் தக்கவைத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக