இலங்கையில் மருந்து இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருந்து இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மருந்துகளின் விலைகளை குறைக்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இந்திய மருந்து விநியோகஸ்தர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் இந்திய மருந்து விநியோக நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் மொத்த மருந்துத் தேவைகளில் சுமார் 30 சதவீதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளால் பூர்த்தி செய்யப்படுகின்றது. 1,000-க்கும் அதிகமான மருந்துப் பொருட்களுக்கான இறக்குமதி அனுமதிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விலை கட்டுப்பாட்டில் இல்லாத மருந்துகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கும் நடைமுறை குறித்து இந்திய விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றம் மற்றும் அதிகரித்துள்ள இறக்குமதி செலவுகளும் மருந்து விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் தற்போது 61 வகையான மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இம்மருந்துகள் சந்தையின் சுமார் 30 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளதுடன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளும் அடுத்த மாதம் முதல் உயரக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக