2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு நிர்வாகம் கடும் பதிலடி வழங்கியுள்ளது.
தற்போதைய பதற்றமான சூழலில், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்கு வருவது அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்காது என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, உலகக் கிண்ணம் என்பது எந்த ஒரு நாட்டின் தனிப்பட்ட சொத்தும் அல்ல என்றும், அதை நிர்வகிக்கும் அதிகாரம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் கால்பந்து அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகக் கிண்ணம் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வு என்றும், அதனைப் பற்றிய முடிவுகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தகுதிச் சுற்றில் சிறப்பான வெற்றி பெற்று முறையாக தகுதி பெற்றுள்ள ஈரான் அணியை யாராலும் நீக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, போட்டியை நடத்தும் நாடு மற்ற நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த நாட்டையே போட்டி நடத்துவதிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஈரானின் விளையாட்டுத் துறை அமைச்சர் அகமது டோனியாமாலி, தற்போதைய போர் சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக