ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே தற்போது நாட்டின் நீதி அமைச்சராக கடமை ஆற்றி வருகிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தற்போது நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்ஷண நாணயக்கார, அன்றைய தினங்களில் மட்டக்களப்பு சென்று சஹ்ரான் தொடர்பான வழக்கில் முன்னிலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சஹ்ரான் போன்ற குற்றவாளிகளின் சார்பில் முன்னிலையானவர்கள் இன்று அமைச்சரவை பதவியில் இருப்பது நகைப்பிற்குரியது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பிற்காக குறிப்பிடத்தக்களவு சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே உள்ளிட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடையும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை, அரசாங்கம் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை உதாசீனம் செய்கிறது என்றும், நாட்டின் கலாச்சாரங்களை பேணுவதில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும், ஊழல் மோசடிகள் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக நிலக்கரி இறக்குமதி, தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி, அரிசி கட்டுப்பாட்டு விலையில் விற்பனை உள்ளிட்ட விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களை துன்புறுத்தும் வகையில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் இன உரிமைகளைப் பேணும் புதிய தலைமை தேவைப்படுகின்றது என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக