சினிமா கதையைப் போல தோன்றும் ஒரு வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் 42 வயதுடைய பெண் ஒருவர், 54 வயதுடைய திருமணமான நபருடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபருக்கு 16 வயது மகனும் 12 வயது மகளும் உள்ளனர்.
இந்த உறவு குறித்து மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் மனநிலையும் கல்வியும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மனைவி குடும்ப நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றம் இருவரையும் ஆலோசனைக்காக அழைத்துள்ளது.
ஆலோசனை அமர்வின் போது, கணவர் குழந்தைகளை நேசிப்பதாக தெரிவித்தாலும் மனைவியுடன் வாழ விருப்பமில்லை என்றும், புதிய காதலியுடன் வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மனைவி விவாகரத்திற்கு ஆரம்பத்தில் சம்மதிக்காத நிலையில், பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து அல்லது பணம் வழங்கினால் விவாகரத்திற்கு சம்மதிப்பதாக மனைவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரின் காதலி ஏற்றுக்கொண்டதுடன், ஒரு பிளாட் மற்றும் பணத்தை வழங்கிய பின் விவாகரத்து நடைமுறை முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக