இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட கைகலப்பில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாசென்புர பகுதியில் உள்ள குறித்த நிலையத்திற்கு சென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண், அந்த நிலையத்தின் உரிமையாளரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நியாயம் கேட்க குறித்த ஆயுர்வேத நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பிரஜைக்கும், அதன் உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மசாஜ் நிலைய உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திஸ்ஸமஹாராம பொலிஸார், கைகலப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியப் பிரஜையை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் பிரெஞ்சு பெண் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக