அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். எனினும், எம்.பி.களின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சபாநாயகர் கடந்த வெள்ளிக்கிழமை (6) நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்ப்பை அறிவித்ததாகவும், அதன் அடிப்படையில் எம்.பி.களின் ஓய்வூதியத்தை முற்றிலும் ரத்து செய்ய அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து, அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை அளித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக