பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான மனநிலைகள் அதிகரித்து வருகின்றன என்பதை தற்போதைய அரசு இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளதாக கூறினார். இருப்பினும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அரசியல் எதிரிகளை கைது செய்வதிலேயே அரசு முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
காவல்துறை மா அதிபரும் பெலவத்தையிலிருந்தே காவல்துறையை நிர்வகித்து வருவதாக கூறிய நாமல் ராஜபக்ச, இதன் காரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவோ அல்லது அவற்றை கட்டுப்படுத்தவோ முடியாமல் இருப்பதாக சுட்டிக்காட்டினார். தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியற்றவையாகியுள்ளன என்றும், உண்மையில் இந்த ஆட்சியின் கீழ் தான் நாடு வங்குரோத்தடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியின் வாழ்க்கை முறையையும் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்லை என தெரிவித்த நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புடன் நடைபயிற்சி செய்வதை விமர்சிக்க முடியாது என்றும், அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பதால் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதிகளை அரசியல் பழிவாங்கலுக்காக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தினால், எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதியும் நாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்வர மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்தார். நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில் பூகோள அரசியலில் தனித்து பயணிக்க முடியாது என்றும், சர்வதேச அரசியல் சூழலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது சட்டமா அதிபர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது போல, முன்னர் சில நீதியரசர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக கூறிய நாமல் ராஜபக்ச, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான தலையீடு காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். இது நாட்டின் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக