முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுச் சொத்து துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (28) பாரிய திருப்பங்களுடன் விசாரணைக்கு வந்தது.
அதிவேகமாக நகரும் விசாரணை:
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த வழக்கின் 90 சதவீத விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்திருந்த ரணில் விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கூண்டில் அமர்த்தப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் தங்கியிருந்தது மோசடியா?
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின், ரணில் விக்ரமசிங்க மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நீதிமன்றத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்த திலீப பீரிஸ், "தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தது, பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதற்குச் சமம்" என்று வாதிட்டார்.
லண்டன் பயணத்தின் உண்மை பின்னணி:
ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் ஒரு 'தனிப்பட்ட பயணம்' (Private Trip) என்பது லண்டன் தூதரக அதிகாரிகள் மற்றும் முன்னாள் தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோரின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசாங்க நிதியை இதற்காகப் பயன்படுத்தியது மோசடி என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. வுல்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்புக் கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலம் அந்த பல்கலைக்கழகத்திடமே விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளருக்கு விளக்கமறியல்:
இந்த மோசடியில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஆவணங்களில் இருந்த "தனிப்பட்ட" என்ற சொல்லை நீக்கிவிட்டு "அதிகாரபூர்வ" என்று திருத்தம் செய்து மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அரசாங்க நிதியை கையாடல் செய்ய உடந்தையாக இருந்த காரணத்தால், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதவான், பிப்ரவரி 11-ஆம் தேதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக