அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத இறுதி வரையிலான காலப்பகுதியில் 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் மற்றும் சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதி உள்ளிட்ட காரணிகளால், மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்த தொகை கடந்த ஜூலை மாத இறுதியில் பதிவாகியிருந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் தாக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு நடப்புக் கணக்கில் 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
இதன்மூலம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வெளிநாட்டு நடப்புக் கணக்கில் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக