இலங்கையில் சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் தற்போது புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு தற்போது புனர்வாழ்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள், நன்சான்றிதழ் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதற்கான சட்டத் திருத்தங்களின் அவசியம் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தால், போதைப்பொருள் தொடர்பான கைதிகளின் புனர்வாழ்வை மேம்படுத்துவதுடன் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக