மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், அன்னதானம் வழங்கப்பட்டபோது உணவு தொடர்பாக இளைஞர் ஒருவருக்கும் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, ஜயங்கேணி பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நால்வரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக