ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிறந்து வெறும் 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயங்கள் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் கவனித்ததைத் தொடர்ந்து சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில், குழந்தையின் சொந்த பாட்டியான 47 வயதுடைய தங்கமணி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின்போது, குடும்பத்தின் பொருளாதார நிலை மற்றும் ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை இருப்பது உள்ளிட்ட காரணங்களால், மேலும் ஒரு பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனக் கருதி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்கவில்லை எனவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறந்து ஒரு நாள் கூட நிறைவடையாத நிலையில், பாதுகாப்பும் அன்பும் தேவைப்பட்ட பச்சிளம் குழந்தை குடும்ப உறுப்பினராலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பவானி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக