பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில், தனிப்பட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக, அவருடன் சுமார் மூன்று ஆண்டுகளாக காதல் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இளம் பெண் ஒருவர் முறைப்பாடு அளித்ததையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டின்படி, இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட காணொளியை சந்தேகநபர் போலியான பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகவும், பின்னர் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முறைப்பாடு திரும்பப் பெறப்படாவிட்டால் காணொளியை சமூக வலைத்தளங்களில் முழுமையாக வெளியிடுவதாக அச்சுறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதாக பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, இரு தரப்பினரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 ஆம் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சம்பந்தப்பட்ட காணொளி பெண்ணின் சம்மதத்துடன் அவரது சொந்த கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக