மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20) பிற்பகல் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கைதி ஒருவர், நீதிமன்ற சிறைக்கூட்டில் இருந்தபோது சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்ற பிணையில் வெளியேறிய பின்னர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணையின் பின்னர் அவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்டிருந்தபோது, மலசல கூடத்திற்குள் சென்ற கைதி சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக