காலி மாவட்டத்தில் ஜின் ஆற்றுப்பகுதியில் வக்வெல்ல பாலத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (23) மாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது, இறந்த நபரின் முகம் சிதைக்கப்பட்டிருந்ததுடன், அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கால்கள் கொன்கிரீட் தூணுடன் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், குற்றம் இடம்பெற்ற பின்னர் சடலம் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பகட்டமாக கருதுகின்றனர்.
பின்னர் நீர்மட்டம் அதிகரித்ததால் சடலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு வக்வெல்ல பாலத்திற்கு அருகே சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண் என சந்தேகிக்கப்படுவதுடன், இதுவரை அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக