தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இரண்டாம் தலைமுறை கட்சியின் தலைவரும் ரோகண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருந்ததாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இனப்பிரச்சினை என்பது வெறுமனே சிங்கள - தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக்கூடாது என்றும், அதற்குப் பின்னால் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் காரணிகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் தொடர்பாக எந்த இடத்திலும் தாம் கருத்து தெரிவிக்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், அந்த அமைப்பை உருவாக்குவதற்கும் ஆதரிப்பதற்கும் இந்தியா முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தார். பயிற்சி முகாம்கள் மற்றும் தங்குமிட வசதிகள் இந்தியாவில் இருந்ததாகவும், பின்னர் அந்த நிலைமை இந்தியாவுக்கே சவாலாக மாறியதாகவும் அவர் கூறினார்.
உலகின் பல நாடுகள் வெளிப்புற சக்திகளின் தலையீடுகளால் பிரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய உவிந்து விஜேவீர, சூடான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் வரலாறுகளை உதாரணமாக முன்வைத்தார்.
மேலும், நாடுகளுக்கிடையிலான மற்றும் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளின் பின்னணியில் சர்வதேச சக்திகளின் தாக்கம் காணப்படுவதாகவும், ஒரு நாட்டின் அரசியல் திசையையும் பல்வேறு வெளிப்புற காரணிகள் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
நாட்டின் பிரச்சினைகளை அணுகும் போது மக்கள் ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்காமல், பரந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணிகளை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்துகள் சமூக மற்றும் அரசியல் தளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக