கண்டி மாவட்டத்தின் தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் உள்ளே இளம் பெண் இயன்முறை மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பெண்ணின் காதலனும், அவரது மனைவியும் யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த மர்ம மரணச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபரும் அவரது மனைவியும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண் 33 வயதுடைய இயன்முறை மருத்துவர் (Physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வந்ததுடன், தென் மாகாணத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணம் முதலில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பதிவாகியிருந்த நிலையில், பின்னர் வெளிவந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் காதல் உறவு, தனிப்பட்ட முரண்பாடுகள் மற்றும் பிற பின்னணிகள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் தொலைபேசி பதிவுகள், பயண விவரங்கள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் சம்பவத்திற்கு முந்தைய தொடர்புகள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக நுவரெலியா பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக