2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு இன்று (24) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் தம்மை கைது செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதனைத் தடுக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்கான மேலதிக சட்டநடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் இன்று நடைபெறும் விசாரணையின் பின்னர் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக