புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் அனுமதியின்றி மூவர் நுழைந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில், முன் அறிவிப்போ அல்லது அனுமதியோ இன்றி மூன்று நபர்கள் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இணைந்து குறித்த நபர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, நுழைந்தவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்பதும், மற்றைய இருவர் அவருடன் வந்த பொதுமக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அடையாள சரிபார்ப்பு நடவடிக்கையின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சிகள் நடைபெறும் காலங்களில் குறித்த பகுதி பொதுமக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதிக்குள் நுழையும் அனைவரின் பாதுகாப்புக்கும் விமானப்படையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுவதால், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்வதற்காக விமானப்படை தளபதியின் உத்தரவின் பேரில் விசேட விசாரணை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக