இலங்கையில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கியமான புதிய நடைமுறையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் இந்த புதிய தீர்மானத்தின் அடிப்படையில், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சரியாக பதிவு செய்யாத பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான அல்லது வேறு இலக்கங்களை பதிவு செய்து, பின்னர் பரீட்சை நேரத்தில் உண்மையான தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பெறுபேறுகளை வெளியிடும் போது பல்வேறு நிர்வாக சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வாறான சிக்கல்கள் இருந்தபோதிலும் மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் இனிமேல் அத்தகைய சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் எந்தவித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் தங்களது தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, சரியான இலக்கத்தை விண்ணப்பத்தில் பதிவு செய்வது அவசியமான பொறுப்பாகும் என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக