ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் ஆரம்ப கட்டத்தில், இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த வங்கியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளை நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் வங்கி ஊழியர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டிருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வங்கியைச் சுற்றியுள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற தினத்தில் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற வங்கி அதிகாரியிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, கொள்ளை சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய நாள் விடுமுறை பெற்றிருந்த வங்கி அதிகாரிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக் கொள்ளையின் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட வலையமைப்பை கண்டறிவதற்காக ஹொரணை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டின் வங்கி பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக