கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டம், நிலமேல் (Nilamel) பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஷாஜி மற்றும் அவரது மாமியார் 58 வயதுடைய ரஷீதா பீவி ஆகியோர் ஹொட்டலில் உணவருந்தியதையடுத்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு, ஷாஜி தனது மனைவி சஜினா, மாமியார் மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளனர். கார் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஆறு பேர் அங்கு மீன் குழம்பு உணவாக எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவருந்தி வீடு திரும்பும் வழியில் ஷாஜி, அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், ஷாஜி மற்றும் அவரது மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சஜினா மேலதிக சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கெட்டுப்போன மீன் குழம்பை உணவாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினரும், பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக