வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. முறைப்பாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக நம்பிக்கை அளித்து, ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர். மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடையவர் என்றும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக