புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்திரி தோட்டத்திற்குள் நுழைந்து பழங்களை பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் பாதுகாவலரால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரதிவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த தோட்டம் அறுவடைக்காக தனியார் நபரொருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள், இரகசியமாக தோட்டத்திற்குள் நுழைந்து முந்திரி பழங்களை பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நபரை தடுத்து நிறுத்தியபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அத்துகோரலகே பிரதீப் சுசாந்த என்ற 38 வயதுடைய நபர் புத்தளம் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியை பயன்படுத்திய பாதுகாவலர் உட்பட எட்டு சந்தேகநபர்களை வனாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக