ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin தன்னை இலக்காக வைத்து தாக்குதல் முயற்சிகள் நடக்கலாம் என்ற பாதுகாப்பு அச்சத்தின் மத்தியில், தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் உள் பகுதிகள் வரை சென்றுள்ளதாக கூறப்படும் சூழலில், மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புடின் தற்போது பலத்த பாதுகாப்பும், பங்கர் வசதிகளும் கொண்ட வால்டே பகுதியில் உள்ள தனது மாளிகையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், தனது மகள்கள் இருவரையும் அவர்களது பிள்ளைகளுடன் உடனடியாக அந்த மாளிகைக்கு வந்து வசிக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புடினுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் அலினா கபேவா தனது குழந்தைகளுடன் அந்த பாதுகாப்பு வளாகத்தில் தங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, எதிரிகளால் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், முக்கிய பாதுகாப்பு கேமரா அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும் என அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் புடினின் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக